Thursday, December 31, 2015

திகில் கதை



சென்னை ஹைதராபாத் நெடுஞ்சாலையில் சந்துருவின் சின்ன கார் பயணித்தது.  
காரில் தனியாக பயணித்த சந்துருவுக்கு 42 வயது.  சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்து, கடந்த இருபது வருடங்களில் பல திகில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதியவன். வருடத்திற்கு ஒரு விருது என்று ஏதாவது ஒரு விருது வாங்கும் புகழ் பெற்ற எழுத்தாளன்.   
கார் கொசத்தலை ஆற்றுப்பாலத்தை தாண்டியது. முன் சீட்டில் கிடந்த கைபேசி மணி அடித்தது.
யாரெனப் பார்த்தான். டிஸ்ப்ளேவில்  எடிட்டர் பாலா பெயர் ஓடியது.
ஸ்டியரிங்கை வலது  கையில் பிடித்தபடி இடது கையில் போனை எடுத்தான்.
“சொல்லுங்க சார்” என்றான்.
“எங்க இருக்கீங்க சார்” என்றார் பாலா.
“ஹைதராபாத் ஹைவேல போயிட்டிருக்கேன் சார்”
“அப்ப கதை சார். நேத்திருந்து வெயிட்டிங் சார்” என்றார் பாலா.
“இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள மெயில் பண்றேன். அதுக்காகத்தான் போயிட்டிருக்கேன்” என்றான் சந்துரு.
“சார் உங்க கதைக்காக ஹெவி காம்படிஷன்.. வரப்போற 2016ல  உங்க முதல் கதை எங்க பத்திரிக்கையில வர்றது எங்களுக்கு பெருமை சார்” என்று பாலா சொல்லி போனை வைத்தார் அந்த வாரப்பத்திரிக்கையின் எடிட்டர் பாலா. சந்துருவின் கதை இருந்தால் விற்பனை சில லட்சங்கள் எகிறும் என்பதால் சந்துருவிற்கு பலத்த போட்டி.  


சந்துருவிற்கு வீட்டில் அமர்ந்து எழுதும் பழக்கம் இல்லை. ரசிகர் கூட்டம் அதிகம். இவன் வீட்டில் இருப்பது தெரிந்தால் வந்துவிடுவார்கள். அதனால்  ஊர் சுற்றியபடியே எழுதுவது அவனது வழாக்கம். கார் திருப்பதி க்ராஸ் ரோடைத்தாண்டி சென்றது. ஏதாவது ஹோட்டல் இருக்கிறதா என்று பார்த்தபடியே வந்தான். ஐந்து கிலோ மீட்டர் தாண்டி, வெறும் காடுகளும் மரங்களும் அமைந்த  ரோட்டின் வலதுபுறம் சரவணா ஹோட்டல் என்ற ஒரு சிறிய ஹோட்டல் தென்பட்டது.
காரை அந்த ஹோட்டல் முன் நிறுத்தினான்.  
சிறிய விடுதி ஆனாலும் பார்க்க சுத்தமாக இருந்தது.
ரிசப்ஷனில் இருந்த இரு வாலிபனுக்கு  வயது இருபது இருக்கும்.   
“வாங்க சார்.. சிங்கிள் ரூம் டபுள் ரூம் டீலக்ஸ் ரூம்,  ஏசி , நான் ஏசி.. எந்த ரூம் வேணும் சார்” என்று ஹோட்டல் சர்வர் போல ஒப்பித்தான் ஒரு பையன். அவனது ஆர்வத்தைப் பார்த்தால், பல நாட்களாக ஹோட்டலுக்கு கிராக்கி இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. நமக்கு வேண்டியது இது போன்ற ஆளில்லாத இடம்தான் என்று முடிவு செய்து கொண்டு “காத்தோட்டமா இருக்கிற மாதிரி  ஒரு சிங்கிள் ரூம்” என்றான் சந்துரு.
“சூப்பர் ரூம் இருக்கு சார்” என்றவன், ஒரு 15 வயது பையனை அழைத்து “டேய், சாருக்கு மாடியில ரைட் சைட் கார்னர்ல இருக்கற ரூம காட்டு” என்பது.   
ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கட்டிவிட்டு, மனைவி  போன்  செய்தால் முகவரி சொல்வதற்காக ஹோட்டல் விசிட்டிங் கார்டு ஒன்றையும் கேட்டு வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.
பையன் “வாங்க சார்” என்று அழைத்துச் செல்வது.
ரூம் சந்துரு எதிர்பார்த்தது போலவே காற்றோட்டம் வெளிச்சம் எல்லாம்  அமையப்பெற்று இருந்தது.


சந்துரு ஜன்னல் கதவுகளை திறந்துவிட சில்லென்று காற்று வீசியது. கண்ணுக்கெட்டிய  தூரம் வரை மரங்கள். பார்க்க ரம்மியமாக் இருந்தது. இனி அடிக்கடி இங்கு வரவேண்டு என்று நினைத்துக்கொண்டான்.   
படுக்கையில் அமர்ந்து தனது லேப்டாப்பை திறந்தான்.
தண்ணீர் கொண்டு வந்த சிறுவன் தயங்கி தயங்கி “சார்.. நீங்க எழுத்தாளார்  சந்துரு  தான” என்றான்.
“ஆமாம்ப்பா..” என்றான் சந்துரு.
“நேத்து டிவில பார்த்தேன்  சார், உங்க கதை எல்லாம் ரொம்ப பிடிக்கும் சார்” என்று சொன்னான்.
“ஒரு போட்டோ சார்” என்று கேட்க, “தம்பி, போறப்போ எடுத்துக்கலாம். நான் இப்ப எழுதணும். யார் கிட்டயும் நான் யாருன்னு சொல்லாத என்ன” என்று சொல்ல, அவன் சம்மதமாக தலையாட்டிச்  சென்றான்.


சந்துரு வரி வரியாக டைப் அடித்து பின்னர் அழித்தான். எந்த யோசனையும் வரவில்லை. சிறப்புச்  சிறுகதை. சிறந்ததாக வரவேண்டுமே என்ற டென்ஷனுடன் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். சட்டென ஒரு யோசனை வந்தவனாக அமர்ந்து யோசனை மறந்து போவதற்குள் முடிக்க வேண்டும் என்றவாறு வேகமாக டைப் அடிக்க துவங்கினான். பின்னர் படித்துப்பார்த்தான்.


கதை
இரவு. ரவி தனியாக அந்த பாதையில் நடந்து வந்தான். கும்மிருட்டு. தூரத்தில் ஒரு விளக்கு கம்பத்தின் கீழ் ஒரு பெண் தனது ஸ்கூட்டியுடன் நின்றிருந்தாள் . ரவி பார்த்தான். அந்த விளக்கு வெளிச்சத்தில் அவள் மிக அழகாக காட்சியளித்தாள். அவள் சுற்றும் முற்றும் பயம் கலந்த பார்வையுடன் பார்த்தாள். ரவி இருட்டிலேயே, தலை முடியை சரி செய்துகொண்டு அவளை நெருங்கினான். அவள் இவனை பயத்துடன் பார்த்தாள்.
“என்ன ஆச்சு” என்று ரவி கேட்க,
“வண்டி ரிப்பேர் சார். சாப்ட்வேர் ஆபீஸ்ல வொர்க் பண்றேன். நைட் டியூட்டி. வீடு பகவான் காலனி.   இந்த வழில போனா சீக்கிரம் போயிடலாம்னு வந்தேன். இப்போ என்ன பண்றதுன்னே தெரியல. பயமா இருக்கு. என்னை எங்க வீடு வரைக்கும் கொண்டு போயி விடுறீங்களா ப்ளீஸ்” என்றாள்.   
அவள் கழுத்தில் மஞ்சள் கயிறோ காலில் மெட்டியோ இருக்கிறதா என்று ரவி பார்த்தான். இல்லை. ஆஹா திருமணம் ஆகாத பெண். இப்ப  ஹெல்ப் பண்ணா இவ மனசுல இடம் புடிச்சிடலாம். கடவுள் தனக்காகவே இப்படி ஒரு அழகிய இங்க நிக்க வெச்சிருக்கார் என்று நினைத்தபடி
“கவலைப்படதீங்க.. நான் உங்க கூட வர்றேன். உங்க காலனிய தாண்டித்தான் நான் போகணும் ” என்றான்.  
அவள் முகத்தில் மகிழ்ச்சி ரேகை பரவ, அதைப்பார்த்த ரவி மனதில் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டான்.
நின்று போன அவளது ஸ்கூட்டியை ரவி தள்ளியபடி நடக்க, அவள் கூட நடந்தாள்.
மின் விளக்கு வெளிச்சத்தில் தென்பட்ட அவளது நிழலை தனது நிழலால் தொட முயன்றபடி நடந்தான் ரவி.
இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.  ரவிக்கு அவள் சொல்வது எதுவும் காதில் விழவில்லை . அவள் உதட்டழகையே  பார்த்தபடி  நடந்தான்.
“டேய்” என்ற ஒரு ஆண் கத்தும்  சத்தம் கேட்க, இருவரும் திரும்பி பார்த்தனர்.  
சற்று தூரத்தில் இருந்து ஒருவன் இவர்களை நோக்கி  ஓடி வந்தான்.  வாயில் பான்பராக்கும் முகத்தில் தாடியும் வைத்த அவனைப்பார்க்கவே ரௌடி போல இருந்தான். அவள் பயந்தபடி ரவியைப் பார்த்தாள்.
“பயப்படாதீங்க.. நான் இருக்கேன்” என்று தைரியம் சொன்ன ரவி திரும்பி எதிரே வருபவனை கண்ணுக்கு நேராக பார்த்தான்.
அவன்  அருகே வந்தான்.
ரவி  அவனைத்தாக்க தயாரானான்.
“என்னடா.. என் சைக்கிள திருடிட்டு.. என்னையே அடிக்க ரெடியாயிட்டியா” என்று ஸ்கூட்டி இருந்த இடத்தைப் பார்த்தபடி சொன்னான் அவன்.
“சைக்கிள திருடிட்டனா”  என்று புரியாமல் கீழே பார்த்த ரவி அதிர்ந்தான்.
ஸ்கூட்டி இருந்த கையில் சைக்கிள் இருந்தது.
“என்னங்க.. என்னது உங்க ஸ்கூட்டி.. சைக்கிலாயிடுச்சு” என்று சொல்லியபடியே அவளை பார்க்க.. அங்கு அவள்  இல்லை .
ரவிக்கு வேர்த்தது.
“என்னடா யோசிக்கற” என்றான் சைக்கிள்க்காரன் சைக்கிளை தன பக்கம் இழுத்துக்கொண்டபடி.  
அதிர்ந்த ரவி .. “இல்ல.. இங்க பொண்ணு” என்று சொல்ல..
“திருடிட்டு வந்துட்டு.. என்னடா உளர்ற” என்று ரவியை அவன் அடிக்க துவங்கினான்.


கதை அங்கு முடிந்தது.
எழுதியவரை திருப்தியுற்றவனாக சந்துரு எழுந்து  நடந்தான், யோசித்தான். அமர்ந்தான். மீண்டும் கதையை தொடர்ந்து  டைப் அடிக்க துவங்கினான்.


கதையில்..
சைக்கிள் திருடி அடி வாங்கிய அடுத்த நாள் மதியம் கொளுத்தும் வெயிலில்  ரவி தனது ஸ்கூட்டரில்   சென்றுகொண்டு இருந்தான்.  தாகமாக இருந்தது. ரோட்டோரம் ஒரு இளநீர் கடை  தென்பட்டது. ரவி ஸ்கூட்டரை நிறுத்தி ஒரு இளநீர் வாங்கினான். ஸ்ட்ரா வேண்டாம் என்று சொல்லி அண்ணாந்து குடித்தான். குடித்தபடியே பார்க்க, எதிரே சிலர் ரவியையே பயமாக பார்த்தனர்.
“என்ன” என்றபடி ரவி இளநீரை முகத்தின் முன் இருந்து நகர்த்தி பார்க்க, அவர்கள் ரவியின் கையையே பார்த்தனர்.
“என்னங்கடா” என்று ரவி  தனது கையைப் பார்க்க கையில் ஒரு பெரிய கல் இருப்பது.
அதிர்ச்சியில் ரவி கல்லைத் தூக்கி  வீச, “டேய்.. பைத்தியம்டா .. கல்லத்தூக்கிப்போட்டு கொல்லப்பார்க்கறான்”  என்றபடி அவர்கள் ஓட்டம் எடுப்பது.


டைப் அடிப்பதை நிறுத்திய சந்துரு பாலாவிற்கு போன் செய்வது.
பாலா போனை எடுக்க “பாலா சார்.. கதை ரொம்ப நல்லா வருது. கிட்டத்தட்ட முடியப்போகுது” என்று எழுதியவற்றை அலைன்  செய்தபடியே பேசினான்.
பாலா, “அப்படியா, சூப்பர் சார்.. நானும் ரெட் ஹில்ஸ் வரைக்கும்  ஒரு வேலையா வந்தேன். எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நீங்க கதைய முடிக்கறதுக்குள்ள வந்துடறேன். ஏதாவது ஒரு டாபால சாப்புடுவோம். உங்க கூட லன்ச் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு” .
சிரித்தபடியே சந்துரு “ஹைவேல திருப்பதி க்ராஸ் ரோடு தாண்டி அஞ்சாவது கிலோமீட்டர்ல ரைட் சைட் ஒரு சின்ன ஹோட்டல் சார். பேரு..” என்று தனது சட்டைப்பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்த்து “ஆஹ்.. சரவணா ஹோட்டல்” என்று சொல்ல, எதிர் முனையில் பாலா அதிர்ச்சியடைவது.
“சரவணா ஹோட்டலா” என்று சந்தேகமாக கேட்பது.
“ஆமாம் சார் “ என்றான் சந்துரு.
“சுத்தியும் சவுக்கு மரங்கள் இருக்குமே ”
“ஆமாம் சார்.. ரம்மியமா இருக்கு” என்றான் சந்துரு.
“சார்.. அந்த ஹோட்டல் ரெண்டு மாசத்துக்கு முன்னால அங்க தங்கியிருந்த தீவிரவாதிகள் வெச்சிருந்த பாம் தவறுதலா வெடிச்சு, மொத்தம் தரை மட்டமாயிடுச்சே சார்” என்று பாலா பதட்டமாக சொல்ல
“இல்ல சார்.. பில்டிங் புதுசா இருக்கு” என்றபடி சந்துரு தனது லேப்டாப்பில் இருந்து தலை எடுத்து பார்க்க எதிரே இருந்த சுவரைக்காணாமல் அதிர்வது. சுற்றியும் பார்க்க.. மரங்கள்.. மரங்கள்.. மரங்கள்..  ஒரு பக்கம் நெடுஞ்சாலை.
கையில் இருந்த செல்போன் நழுவி கீழே விழுவது.  
“அப்ப நான் உட்கார்ந்துட்டிருக்கற கட்டில்” என்று நடுக்கமாக தனக்குத்தானே பேசியபடி பயமாக கீழே பார்க்க, இடிந்து போன கட்டிடத்தின் நடுவே உள்ள ஒரு மரத்தின்  கிளையில் அவன் அமர்ந்திருக்க, எதிரே உள்ள கிளையில் லேப்டாப் இருப்பது.
சரவணா ஹோட்டல் என்ற விசிட்டிங் கார்டு மட்டும் அவன் கையில் இன்னும் படபடப்பது.  

முற்றும்   

No comments:

Post a Comment