வெற்றுக் காகிதம் கூட
விலை மதிப்பற்றதானது
நீ
கிறுக்கித் தந்த பொழுது
உன்
முகம் படர்ந்த கூந்தலை
கோதிவிட
கைகள் குறுகுறுத்த கணம்
காற்று வந்து
உன் குழல் கலைத்துப் போனது
ஆம்
காற்றும் உணர்ந்த காதல் எனது
தொல்பொருள் ஆய்வாளன்
என் தொண்டைக் குழியை
குடைந்த போது
கண்டெடுக்கப்பட்டது
என் பதின் வயதில்
நான் சொல்லப் பயந்து
சொல்லாமல் அடைகாத்த
சில சொற்களும்
என் முதல் காதலும்
என்னை
கம்பளிப்பூச்சி எனப் பார்த்து
இகழ்ந்தன சில வாய்கள்
சுருங்கின சில புருவங்கள்
நான் கூடு புகுந்து விட்டேன்
இன்னும் சிறுது காலம் தான்
வாய்கள் பிளக்கவும்
புருவங்கள் உயர்த்தவும்