சின்ன சின்ன கூடு கட்டும்
சிட்டுக் குருவி போல நானும்
சிட்டு நீ வந்து தங்க
வீடு கட்டி வெச்சேன் புள்ள
சிங்காரி நீ வந்தா
நீ உடுத்த வேணுமுன்னு
சீமையில நான் போயி
பட்டு வாங்கி வந்தேன் புள்ள
தைமாசம் பொறந்ததுன்னு
அறுவடையும் முடிஞ்சதுன்னு
ஆசையில நானுனக்கு
பரிசம் போட ஓடி வந்தேன்
தாலி ஒண்ணு வாங்கி வந்து
நான் கட்டப் போகுமுன்னே
வேறொருத்தன் கட்டிப்புட்டன்
வேரறுந்து போச்சுபுள்ள
மாமான்னு ஓடி வந்து
மடியிலதான் தூங்குவியே
மாமனோட நெனப்ப இப்போ
உம் மனசு மறந்துடுச்சா
மருதாணி வேணுமுன்னு
மல்லுக்கு நின்னவளே
மருதாணி அரைக்கிறப்போ
மனச சேத்து அரைசுட்டியா
நெல்லறுக்கப் போகையில
நிழலாக வந்த புள்ள
நெசமாவே நீயும் இப்போ
நெஞ்சருத்துப் போயிட்டியே
உசுராக இருந்த நீயும்
ஊரு தாண்டிப் போயிட்டாலும்
உனக்காக வேணுமுன்னா
உசுரக்கூட தாரேண்டி
என்னுசுரு உள்ளவரை
உன்நெனப்பு வாழும் புள்ள
நெருப்புல நான் வேகும்போது
நெய் ஊத்த வாடி புள்ள