இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 3
காலை 9 மணி
DGP யின் ஏரோகார் மத்திய சிறைச்சாலையின் வளாகத்தில் வந்து இறங்கியது. ஓடிச்சென்ற சிறை காவலர்கள், வரிசையில் நின்று சல்யூட் அடித்து அவருக்கு மரியாதை செய்தனர்.
ஒரு விசாரணை கைதியை கோர்ட்டுக்கு அழைத்துச்செல்ல DGP யே வந்திருப்பது நாட்டிலேயே இதுதான் முதன் முறை. வேறு வழியில்லை. சிறையில் இருப்பது சாதாரண ஆள் இல்லை.
DGP காவலர்கள் மரியாதையை ஏற்று, பின்னர் சிறைச்சாலைக்குள் நுழைந்தார்.
வீர் கைது செய்யப்பட்டு ஒரு நாள் ஆகியிருந்தது. வீருக்கு வயது இன்றோடு 9956 நாட்கள். அவனது கலைந்த தலை முடியும், குறுந்தாடியும், தொள தொள வென்று அணிந்திருந்த உடையும் அவனை ஒரு விஞ் - ஞானி என்று சொல்லாமல் சொல்லியது. நான்கு புறமும் கண்ணுக்குப் புலப்படாத லேசர் தடுப்புக்களால் பாதுகாக்கப்பட்ட புல் வெளியின் நடுவே தெளிவான முகத்தோடும், புன்னகைக்கும் பார்வையோடும் அமைதியாக அமர்ந்திருந்தான். அந்த தனிமைச் சிறையில் அவனது விரல்கள் காற்றில் ஏதேதோ கணக்கு போட்டபடி இருந்தன.
சிறு வயதில் இருந்தே வீர் இப்படித்தான். எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல அமர்ந்து இருப்பான். சில நேரம் காற்றை பிடிப்பது போல கைகளை காற்றில் வீசியபடியே இருப்பான். சில நேரம் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் வஸ்த்துக்களை பிரித்து மேய்ந்தபடி இருப்பான். நாளுக்கு நாள் அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டு ஒரு நாள் அவனைச் சுற்றி இருப்பவர்கள் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லத் துவங்கினான். முதலில் விளையாட்டாக நினைத்தவர்கள், இவன் அட்சரம் பிசகாமல் அவர்கள் மனதில் நினைப்பதை சொல்ல, பயந்து ஓடினர்.
வீரின் பெற்றோர் அவனை ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
‘டாக்டர் என் பையனுக்கு என்னன்னு பாருங்க?’ , என்று படபடத்தார் அப்பா
“என்ன ஆச்சு ? ” என்றார் டாக்டர்
“யார் மனசுல என்ன நினைச்சாலும் அப்படியே சொல்றான் டாக்டர். ரொம்ப பயமா இருக்கு ” என்றாள் அம்மா.
சற்று தள்ளி அமைதியாக அமர்ந்திருந்த வீரைப் பார்த்தார் டாக்டர்.
“ இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே.. பொய் சொல்றாங்களோ..” என்று அவர் நினைக்க, அவரைத் திரும்பிப் பார்த்த வீர், “ இப்படி நடக்க வாய்ப்பே இல்லையே.. பொய் சொல்றாங்களோ..” என்று சொல்லி , டாக்டரைப் பார்த்து கரெக்ட்டா என்றவாறு புருவங்களை இரு முறை ஏற்றி இறக்கி சைகையில் கேட்க டாக்டருக்கு வியர்த்தது.
“எப்படிப்பா இவ்ளோ கரெக்ட்டா சொல்ற ” என்று அவர் கேட்க, “ தெரியல டாக்டர், என்னைச் சுத்தி இருக்கறவங்க பேசாம இருந்தாலும் எனக்கு அவங்க குரல் காதுக்குள்ள கேட்கற மாதிரி இருக்குது. ஆனா எப்படின்னு தெரியல” என்றான். அதன் பின்னர் எத்தனையோ டாக்டர்களிடம் சென்றும் யாருக்கும் அவனது நிலையை சரியாக சொல்ல முடியவில்லை. அது நோயா, இல்லையா என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் விட்டுவிட்டார்கள்.
ஆனால் வீர் விடவில்லை. தனக்கு எப்படி தெரிகின்றது என்று சோதித்துக்கொண்டே இருந்தான். தனது 6285 ஆம் நாளில் கண்டுகொண்டான்.
இவன் கண்டுகொண்டதை, ஒரு மாதத்தில் நாட்டின் முக்கிய விஞ்ஞானிகள் , பிரமுகர்கள் முன்னிலையில் ஒரு கருவியின் உதவியோடு நிரூபித்துக்காட்டினான்.
“ என்ன சொல்றீங்க .. மூச்சுக்காற்றா ” தலைமை விஞ்ஞானி ஆச்சர்யமாக கேட்டார்.
“ஆமாம். மூச்சுக்காத்து. மூச்ச வெளிய விடறப்போ வெறும் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைட் , நைட்ரோஜன் . ஆர்கான் மட்டும் வெளிய வர்றதில்ல.. மனுஷனோட எண்ணங்களும் தான்” என்றான்.
“எப்படி சாத்தியம்” என்று கேட்டார் பிரதமர்.
“ காதலிக்கற பொண்ணு திரும்பி பார்ப்பான்னு காதலன் காத்துட்டு நிக்கறப்போ, அவ நினைச்ச மாதிரியே திரும்பி பார்ப்பா இல்லையா, இந்த நினைச்ச மாதிரியே அப்படின்னா.. என்னன்னு நினைச்சீங்க, உங்க நினைவலைகள காத்து தூக்கிட்டு சுமக்குது. உங்களுக்கு உள்ள போறப்போ, அடுத்தவனோட எண்ணத்த உங்களுக்கு உணர்த்துது. வெளிய வர்றப்போ, உங்க எண்ணத்த உலகத்துக்கு உணர்த்துது. ஒருத்தர் மனசுல இருக்கறத அடுத்தவருக்கு காற்றலைகளில் கடத்திட்டு போறது மூச்சுக்காத்துத்தான். நான் எப்பவும் எலக்ட்ரானிக் கருவிகளோடையே பொழுத கழிச்சதால என்னைச் சுத்தி இருக்கறவங்க விட்ட மூச்சுக் காத்துல கலந்திருக்கற அவங்க மன ஓட்டத்த அந்த கருவிகளில் உள்ள ஏதோ ஒரு வஸ்து எனக்கு ஒலிப்பரிமாணம் செஞ்சிருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்ப நான் கண்டு பிடிச்சிருக்கற இந்த கருவி மூலமா, ரத்தம், யூரின் டெஸ்ட் பண்ற மாதிரி , Eupnealogy Test மூலமா, மனுஷன் சுவாசிச்சு வெளிய விடற காத்த பிடிச்சு சோதனை செஞ்சா, அவனோட மனசுக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். ” என்று முடிக்க, ஒரு அதிசயமான கண்டுபிடிப்பிற்கு நாடு தலை வணங்கியது. விஞ்ஞானி வீர் உருவானான்.
DGP காவலர்கள் பின் தொடர வீரின் முன் வந்து நின்றார்.
இன்று அவர் வந்திறங்கிய எரோகார் கூட வீர் கண்டு பிடித்ததுதான். கைதிகளை வெட்டவெளியில் உலவ விடுங்கள், ஆனால் கண்ணுக்கு புலப்படாத லேசர் சுவர்களுடன், என்று இந்த சிறைச்சாலைக்கான மூளை கூட வீருடையதுதான். பல அறிய கண்டுபிடிப்புகளை உலகத்துக்குத் தந்த மாபெரும் விஞ்ஞானி இப்படி மக்களை திசை திருப்ப நினைத்தது ஏனோ என்று நினைத்தபடி வீரை வணங்கினார். வீர் புன்னகைத்தான்.
அவர்களுக்கு நடுவில் இருந்த லேசர் கதிர்கள் நிறுத்தப்பட, வீர் எழுந்து வந்தான். DGP யுடன் எரோகாரை நோக்கி நடந்தான்.
சிறைச்சாலையில் விசாரணைக்கைதிகள் என்று எவரும் இல்லை. நாட்டில் தீர்ப்பு மிக விரைவாக வழங்கப்படுகின்றது. அதற்க்கு முக்கிய காரணம், Eupnealogy Test. குற்றம் சுமத்தப்பட்டவரை இந்த சோதனை மூலமாக உடனடியாக கண்டுபிடித்து தீர்ப்பு வழங்க முடிகிறது.
வீர் போலீசாருடன் எரோகார் ஏற, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எரோகார் கோர்ட்டை அடைந்தது.
முக்கியமான கேஸ் என்பதால் நாட்டின் பிரதமர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் வந்திருந்தனர்.
வீர் மீது பொதுமக்கள் யாரும் தாக்குதல் நடத்தாமல் இருக்க, கடுமையான காவல் போடப்பட்டிருந்தது.
வீர் அழைக்கப்பட, குற்றவாளிக்கூண்டில் ஏறி நின்றான்.
“உங்கள் மீது மக்களை அறிவியல் வழியினின்று மத வழிக்கு திருப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஒப்புக்கொள்கிறீர்களா ? ” என்று கேட்டார் நீதிபதி.
“இல்லை, மதம் என்ற சொல் தவறானது. நான் சாமி பூதம்னு எதுவும் சொல்லல, என்னதான் அறிவியல், கண்டுபிடிப்புன்னு நாம சொல்லிக்கிட்டாலும், இதை நமக்கு உணரச்செய்வது ஒரு சக்தி. இத்தனை பேர் வாழற இந்த உலகத்துல எல்லாரும் டாக்டர் இல்ல, எல்லாரும் விஞ்ஞானி இல்ல, எல்லாரும் இசை அறிந்தவர்கள் இல்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வித்தைய கத்துக்கற அறிவ கொடுத்து அவங்க மூலமா உலகத்துல எதுவும் மிஞ்சிப் போகாம, எதுவும் இல்லாமையும் போகாம, சம நிலையில இருக்கற மாதிரி பார்த்துக்கற சக்தி. அந்த சக்திக்கும் நம்ம உயிருக்கும் ஒரு தொடர்பு இருக்கு. அது தான் ஒருத்தன் பொறக்கறதுக்கும் சாகறதுக்கும் காரணம்னு சொல்றேன் “ என்றான்.
“அப்பா விஞ்ஞானத்தையும் அறிவியலையும் மிஞ்சி ஒரு சக்தி இருக்குன்னு சொல்றீங்க ” என்றார் நீதிபதி
“ ஆமாம், பூமியில இருக்கற உயிர்களுக்கும் இந்த உலகத்துக்குமான பந்தம் காந்த அலைகளால இணைக்கப்பட்டிருக்கு. அத துண்டிச்சா போதும். மனுஷனுக்கு உயிர் போயிரும். அந்த நேரத்துல அவன் இருக்கற இடத்த பொறுத்து மரணத்துக்கான காரணம் வேறுபடுமே தவிர, மரணம் நிச்சயம்”என்றான்.
அனைவரும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
“இந்த பூமி சுத்தறப்போ, அண்டத்துக்கும் மனிதனுக்குமான காந்த அலைகள்ல பல கற்றை கற்றையா துண்டிக்கப்பட்டுட்டே இருக்குது. துண்டிக்கப்பட்ட அலைக்கு இணைக்கப்பட்டிருந்த உயிர் யாருதோ அவங்க செத்துப்போறாங்க ”
“எப்படி சொல்றீங்க. ”என்றார் நீதிபதி.
“ ஒரு நாளைக்கு எத்தனை பேர் செத்துப்போறாங்க. எல்லாரும் வயசாகியா சாகறாங்க. இல்லையே. கருவுல இருக்கற குழந்தை சாகுது. ஊருக்கெல்லாம் நல்லது பண்றவன் சின்ன வயசுல செத்துப்போறான். இவனெல்லாம் செத்து தொலைஞ்சா பரவாயில்லன்னு திட்டப்படற அயோக்கியன் உயிரோட இருக்கறான். இந்த வேறுபாடு உலகம் முழுக்க இருக்குங்கறத ஒத்துக்கறீங்களா ” என்றான்
“இது புது விஷயம் இல்லையே. அதுக்குத்தான விதின்னு பேர் வெச்சிருக்கோம். ஆனா உங்க மேல இருக்கற குற்றச்சாட்டே, இந்த காந்த அலைகள நீங்க துண்டிச்சு எந்த மனிதனுக்கும் மரணத்தை உண்டு பண்ணக்கூடிய ரகசியம் உங்களுக்கு தெரியும்னு சொன்னது தான். அதனால பல மக்கள் உங்கள கும்பிட ஆரம்பிச்சது மாபெரும் குற்றம் ” என்றார் நீதிபதி.
“ ஆமாம் தெரியும். இத சொன்னதுக்காக என்னை கும்பிட்டாங்க. நான் அதை விரும்பல. ஆனாலும் அவங்கள தடுக்க முடியல. இது எப்படி குற்றமாகும். எனக்கிருக்கற சக்திய சொல்லிக்கறது குற்றமா ” என்றான்.
“ குற்றந்தான். இப்படி செய்துதான் மதங்களை தோற்றுவிக்கின்றீர்கள். மதங்களால் தான் மனிதனுக்கு பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. மதங்களின் பெயரால் நடந்த மூன்றாம் உலகப்போரில் எத்தனை கோடிப்பேர் உயிரிழந்தனர் என்பதனை மறந்து விடீர்களா. அதனால் தானே மதங்களற்ற அறிவியல் உலகில் நாம் வாழ்கின்றோம் ” என்றாய் நீதிபதி.
வெளியில் வீரின் பக்தர்களுக்கும், பிறருக்கும் சண்டை மூண்டது.
“ இந்த ரகசியம் உங்களுக்குத் தெரியும்னு நிரூபிக்க முடியுமா ” என்றார் நீதிபதி
“ முடியும். யார் தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் “ என்றான்.
நீதிபதி யாரை கை காட்டுவாரோ என்று அங்கிருந்த அனைவரும் பயந்து ஒருவர் பின் ஒருவர் ஒளிந்து கொண்டனர்.
“அதன் தொடர்பை துண்டித்துக் காட்டுங்கள் ” என்று அவர் கைகாட்டிய திசையில் ஒரு போலீஸ் நாய் நின்றிருந்தது.
அந்த நாயைப் பார்த்து “ உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ” என்று வீர் தன் கண்களை மூடி, மூச்சை இழுத்து விட்டான். கைகளை காற்றில் நாட்டியம் போல ஆட்டினான். என்ன நடக்கபோகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்க, மெதுவாக கண்களைத் திறந்தான்.
“துண்டித்துவிட்டேன் , ஆனால் அதனோடு சேர்த்து இன்னும் நான்கைந்து காந்த அலை நூல்களும் அறுந்தன, மன்னிக்கவும்” என்றன். அவன் சொல்லி முடித்த மறுகணம், அந்த வளாகத்தின் அருகில் வானில் சென்றுகொண்டிருந்த ஏரோகார் ஒன்றில் மின் தடங்கள் ஏற்பட, அது சத்தமின்றி அந்த நாய், மற்றும் அதனுடன் நின்றிருந்த காவலர்கள் மீது விழுந்தது. அடுத்த நொடியில் அங்கு ஆறு பிணங்கள் கிடந்தன.
நீதிபதி மூர்ச்சையாகிப் போனார்.
அனைவரும் உறைந்து போய்ப் பார்த்தனர்.
பலர் சாஷ்டாங்கமாக வீரின் முன்னால் விழுந்து வணங்கினர்.
“ இது பித்தலாட்டம். ஒத்துக்கொள்ளுங்கள். என்ன மாயம் செய்தீர்கள்” என்று தனது உள் பயத்தை காட்டிக்கொள்ளாமல் கேட்டார் நீதிபதி.
பிரதமர் “இவரை தனிச்சிறையில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் “ என்று கேட்டார்.
“ இவனை சோதித்து அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும் ” என்று நினைத்தார்.
பிரதமரைப் பார்த்த வீர், “ என்ன பிரதமர் அவர்களே, Eupnealogy test செய்து ரகசியத்தை தெரிந்து கொள்ளத்தானே ” என்று கேட்க, பிரதமர் அதிர்ச்சியடைந்தார். மனதில் எதுவும் நினைக்ககூடாது என்று முடிவுடன் பார்த்தார்.
அவரைப்பார்த்து புன்னகைத்த வீர் , “கண்டுபிடித்த எனக்கே சோதனையா, விடமாட்டேன் ” என்று கண்களை மூடினான்.
பிரதமர் கதி கலங்கிப்போய்.. “ மன்னித்துவிடுங்கள் … என்னைக் கொல்ல வேண்டாம். என் தொடர்பை துண்டிக்க வேண்டாம் ” என்று மண்டியிட்டு வேண்டினார்.
நீதிபதியும் காவலர்களும் கூட பயந்து “ எங்களையும் மன்னித்து விடுங்கள் , உங்கள் சக்தி தெரியாமல் செய்துவிட்டோம் , நீங்கள் ஞானி “ என்று வீரின் காலடியில் விழுந்தனர்.
வீர் கைகளை வேகமாக காற்றில் சுழற்றினான். பின்னர் புன்னகைத்தபடி கண்திறந்தான்.
மரணபயத்தில் அனைவரும் பார்க்க, “ என்னை நம்பாத உலகத்துக்கும் எனக்குமான தொடர்ப நான் துண்டிச்சுட்டேன். நல்லா இருங்க ” என்று சொன்னான்.
அடுத்த நொடி, வெளியல் காத்திருந்த மக்களில் சிலர் உள்ளே புகுந்து “ இன்னும் இந்த ஏமாத்துக்காரனோட என்னய்யா விசாரணை ” என்று சொல்லி, வீரின் மீது பாய்ந்தனர்.
தடுக்க வந்த DGP தூரத்தில் தூக்கி வீசப்பட்டார்.
அடுத்த ஐந்தாவது நொடி, வீர் புன்னகை மாறாத முகத்துடன் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தான்.
பல நூற்றாண்டுகளாக பல ரகசியங்கள் மனிதர்களோடு மறைந்தது போல இந்த
ரகசியமும் அவனோடு மண்ணுக்குள் புதைந்தது.