பிரியமானவளே...
எறும்புகளிடம்
ஜாக்ரதையாக இரு
அவை
இனிப்பைக் கண்டால்
கடத்திச் சென்றுவிடும்
பிரியமானவளே...
எறும்புகளிடம்
ஜாக்ரதையாக இரு
அவை
இனிப்பைக் கண்டால்
கடத்திச் சென்றுவிடும்
உன்னைச் சுற்றும்
என்னைப் பார்த்து
நட்போடு சிரிக்கின்றது
விளக்கைச் சுற்றும்
விட்டில் பூச்சியொன்று.
பல மொழிகள் கற்க
எனக்கு
முப்பதே நாட்கள் பிடித்தது
உன்
விழி மொழி மட்டும்
முப்பது மாதங்களாய்
புரிய மறுக்கிறது
உன் பெயரை
எழுதும்போது
மட்டும்
என் வீட்டில்
பேனாவும் பென்சிலும் கூட
வெட்கப்படுகின்றன
நெல்லறுக்கப் போகையில
நிழலாக வந்த புள்ள
நெசமாவே நீயும் இப்போ
நெஞ்சருத்துப் போயிட்டியே
உசுராக இருந்த நீயும்
ஊரு தாண்டிப் போயிட்டாலும்
உனக்காக வேணுமுன்னா
உசுரக்கூட தாரேண்டி
என்னுசுரு உள்ளவரை
உன்நெனப்பு வாழும் புள்ள
நெருப்புல நான் வேகும்போது
நெய் ஊத்த வாடி புள்ள
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய
மூத்தகுடி மக்கள்
ஒரு
மூர்க்க குடியின் கையில்
நசுங்குவது
மூர்க்க குடியின் வலிமையால் அல்ல
மூத்த குடியினரின் ஒற்றுமையின்மையால்.
கோபம் கொப்பளிக்கும்
அப்பாவின் கண்களுக்கு
முதன் முதலாக
கண்ணீரை அறிமுகப்படுத்தியது
பாட்டியின் மரணம்
முண்டாசுக் கவிஞன் போய்
மூன்று தலைமுறை ஆகிவிட்டது
அவனுக்கு
பராசக்தி காணி கொடுத்தாளா
என்பது மட்டும்
இன்றுவரை தெரியவில்லை
ஒரு நாள்
மூச்சுக் காற்று
உள்ளே வர மறுத்தது
ஏன் என்றேன்
தேவதை இல்லாத இடத்தில்
பக்தனுக்கென்ன வேலை என்றது
உடனே
உன்னை கொண்டு என்னுள் வைத்தேன்
வந்து போய்க்கொண்டிருக்கிறது காற்று
ஆண்களுக்கு மீசை அழகு
என்று
ஏன் சொன்னாய்?
நம் ஊரில்
பள்ளிக்கு வரும் சிறுவர்களெல்லாம்
பென்சில் மீசை வரைந்துகொண்டு வருகிறார்கள்
வானத்தில் இருந்து
உதிர்ந்த
தன் சிறகை எடுக்க
பூமிக்கு வந்தது பறவை
மனிதனைக் கண்டதும்
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள
மீண்டும் வானம் சென்றது
ராமாயண காலத்தில்
நீ பிறந்திருந்தால்
ராமன்
சீதைக்காக ராவணனைக் கொல்லாது
அரசாள அயோதியும் செல்லாது
உனக்கு சேவகம் புரியும்
சேவகனாகியிருப்பான்
நீ
வெட்டிப்போட்ட நகத்துண்டுகள் கூட
நான் தொட்டவுடன்
சிவந்து போயின
நீ என்ன
வெட்கத்தின் மகளா!
பருத்தி...
செடிகளின் தலைவியானது
மனிதர்களுக்கு உடையான நாளிலிருந்து
ராணியானது
நீ உடையணிந்த நாளில் இருந்து.
உலகிலேயே
வாசனையான பூ எதுவென்று
ஆராய்ச்சி நடக்கிறதாம்
பாவம்
அவர்களுக்கு
உன் விலாசம் தெரியவில்லை போலும்
சின்ன வயசில்
அம்மா என்னை
அம்முச்சி வீட்டில் வளர விட்டாள்
அப்பப்ப வருவாள்
அணைத்து முத்தம் தருவாள்
அக்கா தம்பியை மட்டும்
அழைத்துக்கொண்டு போவாள்
அரண்டு புரண்டு நானழுதால்
அச்சு வெல்லம் ஊட்டிவிட்டு
அடுத்தமுறை போகலாமென்று
அடித்துச் சொல்வாள் அம்முச்சி
இப்போது
அம்முச்சி விட்டுவிட்டு போய்விட்டாள்
அச்சுவெல்லம் கசக்கிறது
நெஞ்சுக் கூட்டுக்குள்
நெருஞ்சிமுள் குத்தியதுபோல்
அப்பப்ப வலியெடுக்கும்
அழுதுவிட்டால் வலி தீரும்
வற்றிப்போன ஆற்றிலும்
வைராக்யமாய் தவமிருக்கின்றன
கரைகள் ரெண்டும்
நிச்சயம் ஒரு நாள்
நீர் வருமென.
மூடிய இமைக்குள் இருந்து
பார்த்த போதும்
இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும்
வித்யாசம் தெரிகிறது.
புரையேறும் போதெல்லாம்
யாரோ நம்மை நினைக்கிறார்களாம்
சரி
மற்ற நேரமெல்லாம்
யாருமே நினைப்பதில்லையா!
புவியீர்ப்பு விசைக்கு
இன்றுவரை புலப்படவில்லை
பறவை எலும்பின் ரகசியம்
புலப்பட்டால்...
பறவைகள் நடக்கும்.
மேகவண்ணக் கூந்தல்
பளபளக்கும் கன்னங்கள்
சுட்டும் விழி பார்வை
எல்லாம் முதுமையடைந்து விட்டன....
இளமையில் நீ தந்த
இதழ் முத்தம் மட்டும்
இன்றும் இனித்துக்கொண்டிருக்கிறது.