Sunday, December 20, 2015

இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 4


அது ஒரு பெரிய மருத்துவமனை.
வீர் அப்பாவுடன் டாக்டர் முன் அமர்ந்திருந்தான். டாக்டருக்கு சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும்.
அப்பாவை சோதித்தார்.
“நோ ப்ராப்ளம். நல்லா இருக்கீங்க” என்றார் டாக்டர்.
“அப்ப scanning எப்போ வெச்சுக்கலாம் டாக்டர் ” என்று ஆவலுடன் கேட்டான் வீர்.    
டாக்டர் “நாளைக்கே கூட வெச்சுக்கலாம். 24 மணி நேரம் அப்சர்வேஷன்ல இருக்கணும். எதுவும் சாப்பிட கூடாது. நீங்க காலைல ஆறு மணிக்கு வந்துருங்க” என்றார்.  
அப்பாவும், வீரும் சரி என்று தலையாட்டிவிட்டு கிளம்பினர்.  
வீர் இன்னும் கொஞ்ச காலம் சென்ற பின்னர் ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம் என்று தான் சொன்னான். ஆனால் அவனது அப்பாதான், எடுக்கவேண்டும் என்றால் உடனடியாக எடுத்துக்கொள் என்றார். அவருக்கு இருதயத்தில் பிரச்சனை. எப்பொழுது வேண்டுமானாலும் அது துடிப்பை நிறுத்திக்கொள்ளலாம்.  
வீருக்கு அப்பா என்றால் கொள்ளைப் பிரியம். இந்த காலத்தில் இது பலருக்கு ஆச்சர்யமான விஷயம்தான். இப்பொழுதெல்லாம் அப்பாவையும் அம்மாவையும் எல்லோரும் பேர் வைத்து தான் கூப்பிடுகிறார்கள்.  ஒருவர் இறந்துவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மொபைல்  தகன மேடை வீட்டிற்கே வந்துவிடும். குளிர் சாதன பெட்டி போன்ற அதில் இறந்தவரை படுக்கவைத்து மின் இணைப்பிற்கான சுவிட்சை அழுத்திய அறுபதாவது நொடியில், உள்ளே இருந்த உடல் காற்றில் கரைந்துவிடும். பெட்டியை திறந்ததும் அதில் ஒரு மனிதனை வைத்ததற்கான அடையாளமே இருக்காது.  சென்ற நூற்றாண்டை போல, சில எலும்புகளையும் சாம்பலையும் எடுத்து வைத்து கரைக்க ஆறுகள் இல்லை. கடலில் கரைக்க அனுமதி இல்லை.
நூறாண்டுகளுக்கு முன்னர் ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவரது நினைவாக, புகைப்படங்களும் வீடியோவும் மட்டுமே இருந்தனவாம்.
அதன் பிறகு, சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், மனிதனின்  மூளையை ஸ்கேன் செய்து, அவனது   பேசும் முறைகள், எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வான், என்று அவன்  பிறந்தது முதல் இந்த நொடி வரை எடுத்த முடிவுகள், நடந்து கொண்ட முறைகளை பதிவு செய்து கொண்டு, அந்த மனிதரின் இறப்புக்கு பின்னர் அதனை ஒரு சாப்ட்வேரில் பதிவு செய்து கொடுத்தனர். குடும்பத்தினர்  அந்த சாப்ட்வேரை கம்பியூட்டரில் வைத்துக்கொண்டு, எப்பொழுது அந்த இறந்த மனிதருடன் பேச தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் பேசுவார்கள். அந்த கம்பியூட்டரும் அந்த மனிதர் இருந்திருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பாரோ அதே பதிலை அவரது குரலிலேயே தந்து வந்தது.
இப்பொழுது ஒருபடி மேலே போய், ஒரு மனிதனை ஸ்கேன் செய்து, பேப்பரை பிரதி எடுப்பது போல   பிரதி எடுத்து வைத்துக்கொள்கிறார்கள் . ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர் மறைந்த பின்னர் இந்த ரத்தமும் சதையுமான பிரதி அவர்களுடன்  வாழும். அந்த மனிதர் இறந்துவிட்டார் என்ற நினைப்பே  வராது.  
அதற்காகத்தான் வீர் அவனது அப்பாவை நாளை பிரதி எடுக்க போகின்றான் .
காலை சரியாக ஆறு மணிக்கு வீர் அப்பாவுடன் மருத்துவமனையை அடைந்தான்.
அப்பாவை பெரிய சூட்கேஸ்  போன்ற ஒரு ஸ்கேனரில் படுக்கவைத்தனர். வெளியே இருந்து டாக்டர்கள் கேள்விகள்  கேட்க, அப்பா உள்ளே இருந்தே பதில் சொன்னார். கேள்விகள் அவரது குழந்தைப்பருவம் முதல் இன்று வரை அவரது வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டவையாக இருந்தன. சிறு வயது நண்பர்கள், படிப்பு, வேலை, வாழ்க்கை துணைகள் , அம்மாவைப் பிரிந்தது, சுகம், துக்கம், கோபம் என்று பல கேள்விகள். பதில் அளித்த பொழுது அவரது முக பாவங்கள், பேசும் விதம் எல்லாம் பதிவுசெய்யப்பட்டது.
அதன் பின்னர்,  ஒரு தூக்க மாத்திரை கொடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தி, அவரது உள்  மனம் பதிவு செய்யப்பட்டது. ஒரு மனிதனின் உள்  மனதுதான்  யாருக்கும் தெரியாமல் மனிதன் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் எல்லாம் தங்குமிடம். அது உறங்கும் பொழுது மட்டுமே விழித்திருக்கும்.  அந்த உள்மனதை கிரகித்து ஒரு கருவி காப்பி எடுத்துக்கொண்டது.  
இப்படியாக ஒரு நாள் முழுவதும் அவர் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அனுப்பப்படார்.
அடுத்த ஒரு வாரத்தில் வீரும் அப்பாவும் ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு அப்பா மட்டும் உள்ளே அழைக்கப்பட, வீர் வெளியே காத்திருந்தான். சற்று நேரம் கழித்து வீர் உள்ளே அழைக்கப்பட, உள்ளே சென்றவன் ஒரு கணம் சிலையாகி நின்றான். அங்கே அவனது அப்பா இருவராக இருந்தார். அது ஒரு விசாலமான அறை. இவனுக்கு எதிரே ஐந்தடி தூரத்தில் சுவற்றோரம் அப்பாக்கள் மௌனமாக நின்றிருந்தனர். ஒரே உடை இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. யார் உண்மையான அப்பா, யார் பிரதி எடுக்கப்பட்ட அப்பா என்று  கொஞ்சம் கூட வித்யாசம் கண்டுபிடிக்க முடியாதவாறு இருவரும் இருந்தனர்.   
அங்கிருந்த டாக்டரிடம் , “ டாக்டர், இதுல யாரு எங்க அப்பா” என்று வீர் கேட்ட அடுத்த நொடி ,
“நாந்தான்ப்பா உங்க அப்பா” என்று இரு அப்பாக்களும் ஒரே சுதியில் பதில் அளித்தனர்.
வீர் ஆச்சர்யமாக் டாக்டரைப் பார்க்க, டாக்டர் புன்னகையோடு “ நீங்க இன்னும் சில கேள்விகள் கேட்டு சோதிச்சு, திருப்தியடைஞ்சதா சொன்னா மட்டும்தான் நாங்க உங்களுக்கு பிரதி அப்பாவ தருவோம், இல்லேன்னா சரி செஞ்சு தருவோம்” என்றார்.
வீர் அப்பாக்களைப் பார்த்தான்.
“எப்படி இருக்கீங்கப்பா” என்றான்.
“நல்லா இருக்கேன்ப்பா” என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.
“உங்க ஊர் எதுன்னு சொன்னீங்க, மறந்துட்டேன் ” என்றான்.
“சின்னவேடம்பட்டிப்பா ” இருவரும் சொன்னார்கள்.
“உங்களுக்கு சின்ன வயசுல ஒரு அடிபட்டுச்சே, அந்த தழும்பு இன்னும் இருக்கில்ல ” என்று கேட்டவுடன், இரண்டு அப்பாக்களும் உடனடியாக அவர்கள் மேலாடையை கழற்றி,  திரும்பி நின்று, வலது தோள்பட்டையில் முதுகில் இருந்த அந்த ஒரு சென்டிமீட்டர் அளவுள்ள தழும்பை காட்டினர்.
வீர் அதோடு சேர்த்து அப்பாக்களின் பின் கழுத்தில் இருந்த கடுகளவு மச்சத்தையும் கவனித்தான்.
“வீட்டுக்கு போலாமாப்பா ” என்றதும், “போலாம்ப்பா” என்று இரு அப்பாக்களும் சொல்லி, முன்னே அடியெடுத்து வைத்தனர்.
ஆனால் டாக்டர் வீரிடம் ஒரு மனிதர் இறக்கும் வரை இந்த பிரதி அப்பாவை தர முடியாது என்று சொல்ல, வீர் சரி  என்று தன்  அப்பாவுடன் கிளம்பினார்.  அப்பாவுக்குத்தான் அவரது பிரதியை விட்டு வர மனமே இல்லை .
“எப்படி அச்சு அசலா என்னை மாதிரியே இருக்கானில்ல,  வீர் , நான் போனதுக்கப்புறம் அவனையும் நீ நல்லா கவனிச்சுக்கணும் டா.  நான் இல்லேங்கற நினைப்பே உனக்கு வரக்கூடாது . நான்தான் அவன். அவன்தான் நான்” என்று சொல்லியபடியே வந்தார்.
சில மாதங்களில் அப்பா இறந்துவிட, அவர் இறந்த ஒரு மணி நேரத்தில் பிரதி அப்பா வீடு வந்து சேர்ந்தார். அப்பாவை பிரிந்து எப்படி வாழப்போகிறேன் என்று பயந்த வீருக்கு, அப்பா இறந்ததே ஒரு கனவு போலத்தான் இருந்தது. பிரதி அப்பா, உண்மையான அப்பா போலவே அவனுடன் பழகினார்.     
சாதாரணமாக மனிதன் சுவாசித்து உயிர் வாழ்வது போல, பிரதி எடுக்கப்பட்ட மனிதர்கள் சூரிய சக்தியில் இருந்து மின் சக்தியை எடுத்துக்கொண்டு வாழ்கிறார்கள். இரவு நேரத்திற்காக , அவர்கள்  உடலில் அமைக்கப்பட்ட தோலில் அமைந்துள்ள Inverter cellகளில் மின் சக்தி தேக்கி வைக்கப்படும்.
அவர்களுக்கும் மனிதர்களுக்கு ஒரே ஒரு வித்யாசம், அவர்களுக்கு உணவும் டாய்லெட்டும் தேவையில்லை.  
வீர் பிரதி அப்பாவுடன் வெளியே சென்றான். விளையாடினான். அவர் ஏரோகாரோட்ட வீர் தூங்கியபடியே பிரயாணித்தான். அடிக்கடி கட்டியணைத்து முத்தம் கொடுத்தான்.
அவருக்கு நோய் வராது. மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவரது இதயம் துடிக்கின்றதா, நின்றுவிட்டதா என்று பயந்து பயந்து  இரவெல்லாம் கண் விழிக்க வேண்டிய அவசியமில்லை.
இப்பொழுதெல்லாம் நிம்மதியாக தூங்கினான்.
ஓரிரு மாதங்களில் வீர் அப்பாவுடன் செலவழிக்கும் நேரம் குறைந்தது. அவர் சாப்பிட்டாரா இல்லையா என்று ஓடோடி வந்த காலம் போய் , எப்படியும் அவருக்கு சாப்பாடு தேவையில்லை, தூக்கம் வந்தால் தூங்கப்போகிறார் என்ற நினைப்பு வளரத்துவங்கியது. அவருடன் பேசுவது கூட குறைந்து போனது.
அப்பா இறந்துவிட்டால் என்ன செய்வது என்று அவருடன் அதிக நேரம் அன்போடு பேசியவன், இன்று அவர் எங்கே போகப்போகின்றார், நான் இருக்கும் வரை இருக்கத்தான் போகின்றார், நான் இருக்கும் வரை என்ன, சூரியன் இருக்கும் வரை அவர் இருக்கத்தான் போகின்றார் என்று  அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் நுழைந்த நினைப்பு, அவரை உதாசீனப்படுத்துமாறு செய்தது. ஆனால் அவர் மட்டும் இவனை மிக அன்போடு கவனித்து வந்தார்.
ஆனாலும் வீரின் மனதில் ஏதோ ஒரு இழப்பு இருந்தது. அது என்னவென்று தெரியாமல் இருந்தான்.
ஒரு நாள் வீர் உறங்கிக்கொண்டிருந்த பொழுது, அவனது கனவில் அப்பா வந்தார்.
“வீர், எப்படிப்பா இருக்க” என்றார்
“நல்லா இருக்கேன்ப்பா “ என்றான்.
“ஆனா, நான் நல்லா இல்லப்பா” என்ற அவரது கண்கள் கலங்கியிருந்தன.
“என்னாச்சுப்பா ” என்றான்.
“நீ என்னை மறந்துட்டயில்ல ” என்றார்.
“நான் எங்கப்பா உங்கள மறந்தேன். நீங்கதான்  என் கூடவே இருக்கீங்களே” என்றான்.
“அதுதான்ப்பா பிரச்சனையே , நான் பிரதியா  உன் கூடவே இருக்கறதால தான் நீ என்னை மறந்துட்ட” என்றார்.  அழுதார். அவர் தேம்பி அழுவதைப்பார்த்து வீருக்கும் அழுகை வந்தது.
“அப்பா அழாதீங்கப்பா.. சொல்லுங்கப்பா, உங்களுக்கு என்ன குறை வெச்சேன்னு சொல்லுங்க, நான்   என்ன செய்யணும் சொல்லுங்க” என்றான்.
“ நீ இப்ப அழுகறியே, நான் செத்தப்போ அழுதியாப்பா” என்றார்.
“இல்லப்பா, நீங்கதான் என் கூடவே இருக்கீங்களே” என்றான்.
“ஒரு மனுஷனால, உயிரோட இருக்கறப்போ அடுத்தவங்க மனசுல முழுசா இடம் புடிக்க முடியாதுப்பா, செத்ததுக்கு அப்புறம்தான்  எந்த மனுஷனுக்கும் அடுத்தவங்க மனசுல இடம் தர்றாங்க. அந்த மனுஷனப்பத்தி நினைச்சு அவனுக்கும் அவங்களுக்குமான உறவைப்பத்தி எல்லாம் நினைச்சு வருத்தப்படறாங்க. அந்த மாதிரி நீ என்னைப்பத்தி நினைச்சிருக்கியாப்பா “ என்றார்.
“இல்லப்பா.. நீங்கதான் கூடவே இருக்கீங்களேப்பா” என்று அழுதான்.
“அது நான் இல்லப்பா, அது ஒரு பிரதி. அவ்ளோதான். நான் இல்லாம நீ கஷ்டப்படுவியேன்னு  உனக்காக அதை செய்துக்க சொன்னேன். ஆனா, அது இருந்தா  நீ என்னை மறந்துருவேன்னு நினைச்சு கூட பார்க்கலப்பா”   என்றார்.
“அழுகாதீங்கப்பா” என்று அவரது தோளைத்தொட  எத்தனித்தவன், அவர் பின்னால் நகர, அவரைப் பிடிக்க முடியாமல் கை காற்றில் கீழே இறங்க..  தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்த வீர் கனவைப் போலவே கையை முன்னே நீட்டி, “அப்பா, அழாதீங்கப்பா” என்று அழுதபடியே அவரை பிடிக்க முனைவதாக நினைத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.  
முழிப்பு வந்தது. கண்டது கனவு என்பதை அவன் அறிந்துகொள்ள இரண்டு நிமிடம் பிடித்தது.
கனவில் அப்பா அழுதது அவனுக்கு இன்னமும் கேட்டது.
“அப்பாவுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதவனாகிவிட்டேன். தொழில் நுட்பம் எல்லாம் கொடுத்துச்சு . ஆனா,  மனுஷனுக்கு  இயற்கை கொடுத்த  உணர்ச்சிகள் மரத்துப்போயிடுச்சு. ஒரு மனுஷனோட இழப்புக்காக அழுவது அவனுக்கு  நாம குடுக்கற மரியாதை . அவங்க நினைவுகள சுமந்துட்டு வாழ்றதுல ஒரு சுகம் இருக்கு. நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா  ” என்று எழுந்தான்.
இத்தனை நாளாக தனக்கு ஏற்பட்ட இழப்பு உணர்ச்சிகள் என்பதனை புரிந்துகொண்டான்.  
கண்ணீரை துடைத்தபடி அருகில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் பிரதி அப்பாவைப பார்த்தான்.
“எந்தக்காரணம் கொண்டும், இந்த பிரதி மனிதர்கள  குளிரான பிரதேசங்களுக்கு கூட்டிட்டு போகாதீங்க. குளிர் மைனஸ் 40 டிகிரிய தாண்டுனா இவங்க உடம்புல இருக்கற Inverter cells வேலை செய்யாது.  மைனஸ்  70 டிகிரிய தாண்டுனா ரிப்பேர் கூட செய்ய முடியாது. அப்புறம் நீங்க புது பிரதியத்தான் உருவாக்கிக்கணும் ” என்று டாக்டர் இந்த பிரதி அப்பாவை ஒப்படைத்தபொழுது சொன்னது ஞாபகம் வந்தது.   
இனியும் தாமதிக்க கூடாது என்று முடிவு செய்தான்.
தனது Air conditioner ரில் அதிகபட்சமான மைனஸ் 20 டிகிரி குளிரில் வைத்து ஓடவிட்டு, அறையை தாளிட்டு  வெளியில் வந்தான்.

அப்பாவை நினைத்து ஓவென்று கதறி அழுதான்.அறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட மைனஸ் இருபது டிகிரி, பல்கிப் பெருகியது.பிரதி பிணமானது.

No comments:

Post a Comment