Sunday, December 20, 2015

இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக் கதைகள் - 5


MARS  என்று கொட்டை எழுத்துக்கள்  பொறிக்கப்பட்ட அந்த பெரிய கட்டிடத்தின் முன் ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே  வரிசையில் நின்றிருந்தனர். இது நேர்முகத் தேர்வு. உலகின் பல மூலைகளில்  இருந்தும் மார்ஸ்  செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாமானிய மக்கள் அவர்கள். மொழி, இனம், நிறம் வேறுபாடின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு இது கடைசி தேர்வு. இங்கு வெற்றி பெற்றால் அடுத்து நேராக மார்ஸ் தான். எல்லா செலவையும் International Mars Organisation  ( IMO ) ஏற்றுக்கொள்ளும். அனைவரது முகத்திலும் இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் காணப்பட்டது.  
முதன் முதலில் மார்ஸில் மனிதன் வசிக்க முடியும் என்று நூறு வருடங்களுக்கு முன்னர் கண்டு பிடித்தனர். ஆனாலும் கண்டுபிடித்த பல வருடங்களுக்கு மனிதனால் அங்கு செல்ல முடியவில்லை . தயாரிக்கப்பட்ட  ராக்கெட்டுகள் எல்லாம் ஒரு வழிப்பாதைக்கானவை. செல்லலாம். வரமுடியாது. பல போராட்டங்களுக்குப் பிறகு, பூமியில் இருந்து மார்ஸ் வரை சென்று, மீண்டும் பூமிக்கு திரும்பும் ராக்கெட் 2026 ம் ஆண்டு தயாரிக்கப்பட,  பூமியில் இருந்து சுமார் 225 மில்லியன்  கிலோ மீட்டர்கள் தொலைவை  257 நாட்களில் கடந்து விஞ்ஞானிகள் X மற்றும்  Y முதன் முதலில் மார்ஸில் கால் பதித்தனர்.
அதன் பின்னர் உலகில் உள்ள ஒரு சில  பெரும் பணக்காரர்கள் மட்டும்  கோடி கோடியாய் செலவழித்து மார்ஸ் சென்று வந்தனர். சாதாரண மக்களுக்கு மார்ஸ் என்பது எட்டாக் கனவே. ஆனால் இப்பொழுது காலம் கனிந்து சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பு அளிக்க முன் வந்ததுள்ளது IMO.  
வரிசையில் நின்றிருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் ஒரு அதிகாரி ,
“ வணக்கம்.  நீங்க எல்லாரும்  பல நாடுகள்ல இருந்து வந்திருக்கறீங்க. ஏன் எப்பவுமே விஞ்ஞானிகள் தான் வேற்று கிரகத்துக்கு போகணுமா, சாதாரண மக்கள் போககூடாதான்னு யோசிச்சப்பத்தான், எங்களுக்கு ஒரு ஐடியா தோணுச்சு. மனுஷ வாழ்வுக்காக பாடு படற மனுஷங்கள அனுப்பணும்னு. இந்த உலகத்துல  ஒரு விஞ்ஞானி இல்லாமையோ, ஒரு மருத்துவன் இல்லாமையோ, சாப்ட்வேர் இஞ்சினியர் இல்லாமையோ போனாலும் கூட வாழ்ந்துடலாம்.  ஆனா  ஒரு விவசாயி இல்லாம,  உடை தயாரிக்கறவர் இல்லாம, கொத்தனார் இல்லாம வாழ முடியாது.  கொடுமை என்னன்னா கிட்டத்தட்ட 1500 கோடிப்பேர் வாழற இந்த உலகத்துல,  மனுஷ வாழ்க்கைக்கு முக்கியமான இந்த மூணும் தெரிஞ்சவங்க ஒரு பெர்சன்ட் தான். அவங்கள நம்பித்தான் மிச்ச 99 பெர்சென்ட்டும் வாழுது.  அந்த ஒரு பெர்சென்ட்  இல்லேன்னா இந்த பூமில மனுஷ வாழ்க்கை இல்லன்னு தெரிஞ்சும் , அவங்கள  அடிமட்ட  நிலையிலயே வெச்சிருக்கு இந்த அதிகார வர்க்கம். அதனால்தான் அந்த ஒரு பெர்சென்ட்ட  சேர்ந்தவங்கள கௌரவிக்கற விதமா , உங்கள தேர்ந்தெடுத்திருக்கோம்.  நீங்க போக எட்டு மாசம் ஆகும். அங்க ரெண்டு மாசம் தங்க வைக்கப்படுவீங்க. அப்புறம் எட்டு மாசத்துல திரும்ப கூட்டிவரப்படுவீங்க. மொத்த செலவும் எங்களோடது ” என்று சொல்ல, அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.   
பின்னர் அவர் , “  இப்போதைக்கு ஆயிரம் பேரை அனுப்பற வசதி மட்டும் இருக்கறதால, உங்கள்ல ஆயிரம் பேரை மட்டும் தேர்ந்தெடுக்க, ஒரு சோதனை வைக்கப்போறோம். சோதனைக்காலம் ஆறு மாசம். நீங்க இங்கயே தங்கி, எங்க நிலத்தில விவசாயம் செய்து காட்டணும். துணி நெய்து காட்டணும்.  வீடு கட்டி காட்டணும் “ என்றார்.
அடுத்த ஆறாவது மாதத்தில், ஒவ்வொரு தொழிலிலும் சிறந்து விளங்கியவர்களில் ஆண்களும் பெண்களுமாக சேர்த்து  மொத்தம் ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  
அடுத்த இரண்டாவது நாளில் உலக பிரதமர்கள், அனைவரது முன்னிலையில் அந்த அதிர்ஷ்டக்காரர்கள் ஆயிரம் பேரும் ராக்கெட் ஏறினர்.
அடுத்த எட்டாவது மாதத்தில் அவர்கள் மார்ஸில், ஒரு பனிமலை அருகில் தரை இறக்கப்பட்டனர்.   
அவர்களை அழைத்துச்சென்ற ராக்கெட்டில் இருந்து, அவர்களுக்கு சில மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அளிக்கப்பட்டது.  
புதிய உலகத்தில் கால் வைத்த மகிழ்ச்சி அனைவருக்கும்.
ராக்கெட்டில் இருந்த ஒரு ரோபோ அவர்களிடம் , “ நீங்கள் இங்கு சுற்றிப்பாருங்கள். இரண்டு நாள்
கழித்து வந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லி ராக்கெட்டை கிளப்பியது.
இரவில் குளிரடிக்க, அனைவரும் உடை மீது உடையணிந்து குளிரை தாங்கிக்கொண்டனர்.
இரண்டு நிலவுகள் தோன்றியதை வாய் பிளந்தபடி  பார்த்தனர்.
கொண்டு சென்ற உணவுப்பொருட்களைக் கொண்டு அனைவரும் பசியாறினர்.   
இரண்டு நாட்கள் ஆனந்தமாக கழிந்தது.
ஆனால் ராக்கெட் வரவில்லை. இரண்டு நாள் இரண்டு மாதங்கள் ஆனது. ராக்கெட் வரவில்லை.  
கொண்டு வந்த உணவுப்பொருட்கள் குறைய, விவசாயிகள் விவசாயம் செய்ய தகுந்த நிலம் தேடினர் .
குளிரையும் சூட்டையும் தாங்க முடியாமல், வீடுகள் கட்டினர். உடைகள் கிழிந்து போக, கிடைத்த பொருட்களைக்கொண்டு உடைகள் தயாரித்தனர்.
ஒண்ணரை வருடங்கள் ஓடியது. பூமியில் உலக நாடுகள், மார்ஸில் இருந்து திரும்பும் மக்களுக்காக காத்திருந்தது. அவர்கள் கிளம்பிய நாள் முதல், இன்று இத்தனை கிலோமீட்டரை கடந்து இருக்கிறார்கள் என்று நாளும் உலகத்துக்கு சொல்லி வந்தது IMO. மார்ஸில் இறங்கிவிட்டார்கள், ஆனந்தமாக இருக்கிறார்கள் என்று, சோதனைக்காக ஆறுமாதங்கள் தங்கியிருந்தபொழுது எடுத்த புகைப்படங்களை காட்டி ஏமாற்றி வந்தது. இன்னும் சில நாட்களில் வந்துவிடுவார்கள் என்று செய்தி வெளியிட்ட மறு நாள், ராக்கெட்  பூமியில் இருந்து லட்சத்தி முன்னூறாவது கிலோ மீட்டரில்  எஞ்சின் கோளாறால் வெடித்துச் சிதறியது என்ற செய்தியை கண்ணீரோடு சொன்னார் IMO தலைவர்.
உலகம் நம்பியது.  அழுதது.
உலகத்தை நம்பவைத்த தலைவர் தன குழுவுடன் அறையில் அமர்ந்திருந்தார்.
அவர்கள் எதிரே இருந்த திரையில் மார்ஸில் மக்கள், ராக்கெட் வராது என்பதனை புரிந்துகொண்டவர்கள் போல விருப்பமானவர்களுடன் வாழத்துவங்கிவிட்ட காட்சிகள் ஓடத்துவங்கியது.
தலைவர் , “இந்த உலகத்த நம்ப வெச்சுட்டோம்.  இன்னும் ஆறு மாசத்துல நம்ம குழு, அவங்கவங்க குடும்பத்தோட  கிளம்பணும். அதுக்குள்ளே அங்க, நம்ம அடிமைங்க  நமக்கான உலகத்த உருவாக்கியிருப்பாங்க” என்று சிரித்தார்.  
ஆறு மாதங்கள் கழித்து ஒரு நள்ளிரவில், IMO தலைவர் மற்றும் சிலரது குடும்பங்கள் ரகசியமாக ராக்கெட்டில் மார்ஸ் கிளம்பினர்.
சரியாக பூமியில் இருந்து லட்சத்தி முன்னூறாவது கிலோ மீட்டரில், ராக்கெட்  எஞ்சின் கோளாறால் வெடித்துச் சிதறியது.   
மார்ஸில், உணவுக்காகவும், உடைக்காகவும், பெண்களுக்காகவும் அடித்துக்கொண்டு சில காலம் கடந்த பின்னர், அவர்களுக்குள் ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொண்டனர். பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டனர் . பல்வேறு மொழிகளைக் கொண்டவர்களாதலால், அனைத்து மொழிகளையும் கலந்து ஒரு மொழியையும், எழுத்துருவையும்  உருவாக்கினர்.
அன்றில் இருந்து சரியாக ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்,  மார்ஸில்  ஒரு ஆரம்ப பள்ளியில் , வரலாற்று ஆசிரியை பாடம் நடத்தினார் .
“நம்ம மார்ஸ் உருவாகி பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனதாகவும் , மனித வாழ்க்கை  துவங்கி ஆயிரம் ஆண்டுகள் ஆச்சுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. முதல் மனிதன கடவுள் மண்ணுல இருந்து உருவாக்குனதா மதங்களும் , ரசாயன துகள்கள் சேர்ந்து உருவானதாக விஞ்ஞானிகளும் சொல்லிக்கறாங்க “ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் அங்குள்ள Space research centre  தலைவர், சில வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடித்த டிவி என்னும் சாதனத்தில் ஆனந்தமாக உரையாடினார். அதில்  “ வர வர நம் கிரகம் மாசடைந்து விட்டது. மக்கள் தொகை பெருகிவிட்டது. நம் மக்களை  குடியேற்ற புதிதாக ஒரு கிரகத்தை பல வருடங்களாக தேடி வந்தோம். இன்று அதனை கண்டு பிடித்து விட்டோம். இங்கிருந்து சரியாக 255 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில், 257 நாட்கள் பயணத்தில் அது அமைந்துள்ளது. அதற்கு எங்கள் ஆராய்ச்சிக் குழு பூமி என்று பெயர் வைத்துள்ளது” என்றார் .    

No comments:

Post a Comment